குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் காவல்துறை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் வழக்கறிஞரான 55 வயது ஸ்டீவன் ஜான் லாம் குவேட் கெங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதியன்று குடிபோதையில் அவர் வாகனம் ஓட்டியபோது சாலைத் தடுப்பு மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
விபத்து நிகழ்ந்தபோது வேறொருவர் வாகனத்தை ஓட்டியதாக காவல்துறை அதிகாரிகளிடம் லாம் பொய் சொன்னதாக அறியப்படுகிறது.
கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதாகவும் லாம் மீது வியாழக்கிழமையன்று (ஜூன் 19) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டியதற்காக 1999ஆம் ஆண்டிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 2006ஆம் ஆண்டிலும் லாமுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதியன்று அதிகாலை 12.30 மணி அளவில் சுவா சூ காங் சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் பாஞ்சாங் சாலையில் லாம் கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 15ஆம் தேதியன்று லாம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

