எம். ரவி என பிரபலமாக அறியப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ரவி மாடசாமியுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவரது நண்பர் மீது இன்று (டிசம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
அப்பர் பூன் கெங் ரோட்டில் உள்ள வீட்டில் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
டிசம்பர் 24 விடியற்காலை ஒரு மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ரவியின் நண்பர் ஷான் லூ ஷி ஜியான், 40 போதைப்பொருளுக்கு ஏற்பாடு செய்து ரவியைச் சந்தித்தாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு திரு லூ, 2011ஆம் ஆண்டில் வெளிநாட்டு வங்கி ஒன்றில் சேர்ந்து உதவி துணைத் தலைவராக பணியாற்றி வருவதாக அவரது லிங்கடின் பக்கம் தெரிவிக்கிறது.
போதைப்பொருள் சோதனை முடிவுக்காகவும் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை மீட்பதற்காகவும் வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
2026 ஜனவரி 2ஆம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 24ஆம் தேதி மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 56 வயது ரவி உயிரிழந்தார்.
அவர், நண்பருடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாகவும் வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும் முன்னர் வெளியிட்ட தகவலில் காவல்துறை தெரிவித்தது. மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிர் பிழைக்கவில்லை.

