பல நாடுகள் இளவயதினருக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்துள்ளன அல்லது தடை செய்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.
இதில் சிங்கப்பூரின் அணுகுமுறை என்ன என்று கேட்டால், இந்தக் கட்டத்தில், நமது அரசாங்கம் தனது வாய்ப்புகளைத் திறந்தே வைத்துள்ளது என்று கூறியுள்ளார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.
இளவயதினருக்கான சமூக ஊடகத் தடை குறித்து அமைச்சர் டியோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தடை, சமூக ஊடகங்கள் இளவயதினர் பலரது வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள விதத்தை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு வலுவான மற்றும் எளிமையான செய்தியை அனுப்புகிறது.
சிலர் விதிகளை மீறினாலும் இளவயதினர் தங்கள் நேரத்தைச் செலவிட இதைவிடச் சிறந்த வழிகள் உள்ளன என்பதே இதன் செய்தி.
ஆனால், மின்னிலக்க அனுபவம் இளவயதினரின் வாழ்க்கையுடன் ஓர் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், தடைகள் மட்டுமே இளவயதினர் சமூக ஊடகங்களுடன் பழகும் விதத்திலோ அல்லது இணையத்தில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதிலோ உண்மையான மாற்றங்களைக் கொண்டுவராது.
வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு விதமான சேவைகள்
13 வயதுக்குட்பட்ட இளவயதினரைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் நேரடியானது. வயதான பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சமூக ஊடகத் தளங்களில் சிறு வயதினர் இருக்கக்கூடாது.
உண்மையில், சமூக ஊடகத் தளங்களின் சேவை விதிமுறைகள் இதை ஏற்கெனவே தடைசெய்கின்றன. ஆனால் ஒரு பயனர் வயதுக்குட்பட்டவரா என்பதை முறையாகச் சரிபார்க்க அவற்றுக்கு அதிக ஆர்வம் இருப்பதில்லை. எனவே, வலுவான வயது உறுதி நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக, தளங்களைப் பொறுப்பேற்கச் செய்ய அரசாங்கங்கள் தலையிட வேண்டும். 13 வயதுக்குட்பட்ட பயனர்களைத் தங்கள் தளங்களிலிருந்து விலக்கி வைக்க, குறிப்பிட்ட சமூக ஊடகச் சேவைகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான முதல் படி இதுவாகும்.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் தேவை
சில பாதுகாப்பு நடவடிக்கைகள் தெளிவாக அவசியமானவை மற்றும் பயனுள்ளவை. உதாரணமாக, வயதுவந்த அறிமுகமில்லாத நபர்கள் இளம் பயனர்களுக்கு அனுப்பும் வேண்டாத செய்திகள் தடை செய்யப்பட வேண்டும். தளங்களில் செலவிடும் நேரத்தை நீட்டிக்கும், அடிமையாக்கும் வடிவமைப்பு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் டியோ வலியுறுத்தினார்.
நாம் வெற்றி பெற்றால், இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள், இளவயதினர் மின்னிலக்க உலகில் மிகவும் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு மேலும் பயனுள்ள கட்டமைப்பை வழங்கக்கூடும். அது நாம் அடையப் பாடுபட வேண்டிய ஒரு இலக்காகும் என்றார் அவர்.

