பாசிர் ரிஸ் கடற்கரையில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில், 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுயநினைவின்றி செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) பிற்பகலில் அச்சம்பவம் நடந்தது.
கடற்கரையில் படகோட்டம், துடுப்புப் பலகை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட எழுவரில் இந்த இளையரும் ஒருவர்.
ஜூலை 5ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து மாலை 4.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்கும் இரு பிள்ளைகள் கேகே மகளிர், குழந்தைகள் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த மே மாதத்தில் மீன் பண்ணை ஊழியர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி வேலையிடத்திற்கு அருகே மின்னல் தாக்கியதில் மூன்று ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

