ஜோகூரில் கைது செய்யப்பட்ட லிம் தியென் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டார்

ஜோகூரில் கைது செய்யப்பட்ட லிம் தியென் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டார்

2 mins read
2aee1bb0-0bec-4fda-950b-912127f214c7
சிங்கப்பூர் காவல்துறையின் வர்த்தக விவகாரத் துறை, 61 வயது சிங்கப்பூரரான லிம் தியென் என்பவரை, ஆகஸ்ட் 11ஆம் தேதி மலேசியாவிலிருந்து திரும்பியபோது கைது செய்துள்ளது. - படம்: சிஙகப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

வழக்கறிஞர் லிம் தியென், ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

எதிர்க்கட்சியான ‘பீப்பள்ஸ் வாய்ஸ்’-இன் நிறுவனரான இவர், ஆகஸ்ட் 6ஆம் தேதி அரச மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாமல் வழக்கறிஞர் தொழில் செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடங்குவதற்காக, ஆகஸ்ட் 3ஆம் தேதி சிங்கப்பூர் அரசு நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தவறியிருந்தார். அவருக்கு எதிரான கைது ஆணை அதே நாளில் பிறப்பிக்கப்பட்டது.

61 வயதான அவர், 2024 ஜூலையில் சட்டத் தொழில் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 2025 பிப்ரவரியில் ஒரு மாவட்ட நீதிபதியால் ஆறு வாரச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மக்கள் சீர்திருத்தக் கூட்டணியின் தலைமைச் செயலாளராகவும் இருக்கும் லிம் தியென், செல்லுபடியாகும் வழக்கறிஞர் பயிற்சிச் சான்றிதழ் ஏதுமின்றி, 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை 32 முறை நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொண்டு ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தார்.

2026 பிப்ரவரியில், உயர் நீதிமன்ற நீதிபதி அரசுத் தரப்பின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, லிம் தியெனின் தண்டனையை மூன்று மாதங்கள், ஒரு வார சிறைத்தண்டனையாக அதிகரித்தார்.

இதற்கிடையே, ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று, லிம் தியென் சிங்கப்பூரை விட்டு வெளியேற உதவியதாகக் கூறப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

44 வயதான முகமது ஆதம் அப்துல் கரீம், 37 வயதான சுலைமான் முகமது ஃபிர்தாஸ் ஆகிய இருவர் மீதும், நீதியின் போக்கைத் தோற்கடிக்கும் வகையிலான ஒரு செயலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தலா ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகைகளின்படி, அந்த இருவரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி லிம் தியென் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்த மேல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
கைதுஜோகூர் பாருசான்றிதழ்வழக்கறிஞர்