சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் உதவித் தலைவராகப் பங்களிப்பதில் பெருமிதம் அடைவதாக உள்ளூர் காற்பந்து நட்சத்திரமான 34 வயது ஹாரிஸ் ஹருண் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் தலைவராக ஃபாரஸ்ட் லீ அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்கு உதவித் தலைவர்களை லீ அறிவித்தார்.
அவர்களில் லயன் சிட்டி செய்லர்ஸ் காற்பந்துக் குழு, சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழு ஆகியவற்றுக்கு விளையாடும் ஹாரிசும் ஒருவர்.
சங்கத்தின் புதிய தலைமை திங்கட்கிழமை (ஏப்ரல் 28) பதவி ஏற்கும்.
“நான் காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெறவில்லை. மேலும் பல ஆண்டுகளுக்கு விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. ஓய்வுபெற வேண்டிய நேரம் வரும்போது எனக்குத் தெரியும். ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. காற்பந்தாட்டத்தில் என்னால் மேலும் பங்களிக்க முடியும்,” என்றார் ஹாரிஸ்.
காற்பந்துப் போட்டிகளில் விளையாடும் அதே நேரத்தில், சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைமைத்துவக் குழுவில் காற்பந்து ஆட்டக்காரர் ஒருவர் அங்கம் வகிப்பது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது.
“சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைமைத்துவக் குழுவில் இடம்பெறும்போது பதவியுடன் கூடுதல் பொறுப்பும் வருகிறது. தேசிய காற்பந்துக் குழுவின் அணித் தலைவராகவும் இருக்கிறேன். எனவே, எனக்குக் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். அவற்றைச் சமாளிக்கவும் என்னால் முடிந்தவரை சங்கத்தின் உதவித் தலைவராகவும் காற்பந்து ஆட்டக்காரராகவும் செவ்வனே செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார் ஹாரிஸ்.