குப்பை கொட்டும் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் தொடர் முயற்சிகள் நல்ல பலனை அளித்துள்ளதாகத் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் விதிக்கப்பட்ட அபராதங்கள், சீர்திருத்தப்பணி உத்தரவுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பொதுத் தூய்மை நிலை குறித்த புதிய விவரங்களை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட தேசியச் சுற்றுப்புற வாரியம், 2026ன் முதல் பாதியில் தரையில் குப்பை கொட்டிய குற்றங்களுக்காகக் கிட்டத்தட்ட 5,300 அபராதங்களை விதித்துள்ளதாகக் கூறியது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 7,000 ஆக இருந்தது.
2026ன் முதல் பாதியில் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு 267 சீர்திருத்தப்பணி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 373 ஆக இருந்தது.
அதிகமாக குப்பை இடப்படும் பகுதிகளில் ஒன்றான அங் மோ கியோ அவென்யு 4, பிளோக் 628 பகுதி ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை அங்கு குப்பைகளின் எண்ணிக்கை 54 விழுக்காடு குறைந்ததைச் சுட்டியுள்ளது.
இலக்கு வைக்கப்பட்ட செயலாக்க, கண்காணிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கு முன், குப்பை அளவீடுகள், பொதுமக்களின் கருத்துகள் நேரடிச் சோதனைகள் உள்ளிட்டவற்றின் மூலம் இத்தகைய பகுதிகளைத் தேசியச் சுற்றுப்புற வாரியம் அடையாளம் காண்கிறது.
தீவு முழுவதும் இதுபோன்ற 12 பகுதிகள் உள்ளன. அத்துடன், உயரமான வீடுகளிலிருந்து குப்பை கொட்டுவதைக் கண்டறிய தேசியச் சுற்றுப்புற வாரியம் தனது கேமரா கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்தி வருகிறது.
ஒரு மாதத்திற்குப் பிறகு, கேமரா கண்காணிப்புக் காலத்தை 14 நாள்களிலிருந்து 28 நாள்கள் வரை நீட்டித்தது. உயர்மாடிக் கட்டடங்களிலிருந்து குப்பை கொட்டுவதைத் தடுக்கக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
தேசியச் சுற்றுப்புற வாரியம் இதற்காக நகர மன்றங்களுடன் இணைந்து இலக்கு வைக்கப்பட்ட கண்காணிப்புக்கான இடங்களை அடையாளம் கண்டு வருகிறது.
தொடக்கக் கட்டமாக, அக்டோபர் 2025ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாத முன்னோடித் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நகர மன்றத்திற்கும் பிரச்சினைக்குரிய பகுதிகளைக் கண்காணிக்க மாதத்திற்கு இரண்டு உயர்மாடி குப்பைக் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன.
அனைத்து 19 நகர மன்றங்களும் பங்கேற்ற இந்தத் திட்டத்தின்கீழ் அக்டோபர் 2025 முதல் ஏப்ரல் 2026 வரை 73 கேமராக்கள் பொருத்தப்பட்டன.
தேசியச் சுற்றுப்புற வாரியம், தீவு முழுவதும் மேற்கொண்ட கிட்டத்தட்ட 1,300 கேமரா பதிவுகளில் 26 விழுக்காடு குற்றவாளிகளே கண்டறியப்பட்ட நிலையில், இந்த முன்னோடித் திட்டம் 34 விழுக்காடு வெற்றியைப் பெற்றது.


