பல்வேறு மருத்துவமனைகளில் இவ்வாரம் அவசர மருத்துவ சிகிச்சை நாடியோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
அதனால், நோயாளிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய இருந்தது.
பொது விடுமுறைக்குப் பிந்திய மருத்துவத் தேவை அதிகரிப்பு அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
கடுமையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் ஆண்டின் குறிப்பிட்ட சில காலங்களில் நிரம்பி வழிவது வழக்கம் என்று ஊடகங்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
மேலும், தற்போதைய நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு என்பது பொது விடுமுறைக்குப் பிந்திய வழக்கமான நிலை என்றும் அது தெரிவித்து உள்ளது.
சாங்கி பொது மருத்துவமனையும் செங்காங் பொது மருத்துவமனையும் தங்களது அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்திருப்பதாக கடந்த புதன்கிழமை (மே 14) தனித்தனியாக வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தன.
இவ்வாறு திடீர் என்று நோயாளிகளின் வருகை அதிகரிக்கும் நேரத்தில் உடல்நிலைக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவில் கண்டறியும் நடைமுறைகளை மருத்துவமனைகள் தொடர்ந்து பின்பற்றும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
அத்தகைய நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையில் முன்னுரிமை கொடுப்பதையும் அதேநேரம் நோயாளி பராமரிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய அந்த நடைமுறை அவசியம் என்றது அமைச்சு.