அப்பர் தாம்சனில் லாரி ஒன்று வலப்புறமாகத் திரும்பியபோது இடப்புறமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அங் மோ கியோ அவென்யூ 1 சந்திப்பில் இருக்கும் அப்பர் தாம்சன் சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்தில், லாரி ஓட்டுநருக்கு சிறிய காயம் ஏற்பட்டது என்றும் ஆயினும் அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டார் என்றும் அது கூறியது.
லாரி கவிழ்வதற்கு முன்பு, அதன் இடது சக்கரங்கள் மூலம் சமநிலைக்கு வர முயன்றதையும் பழுப்பு நிற திரவம் சாலையிலும் புதர்களிலும் கொட்டிக்கிடப்பதையும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளியில் காண முடிந்தது.
மேலும், பாரந்தூக்கி ஒன்று லாரியை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதையும் அக்காணொளி காட்டியது.
லாரியின் 46 வயது ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

