மத்திய சேமநிதி (மசே நிதி) விகிதம் கூட்டப்படும்போது கார் ஓட்டுநர்கள், உணவு விநியோகம் செய்பவர்கள் என மாதம் 2,500 வெள்ளி அல்லது அதற்குக் கீழ் வருமானம் ஈட்டும் இணையவழி ஊழியர்களுக்குக் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இன்று (14-02-2023) நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது நிதியமைச்சருமான வோங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய சேமநிதி விகிதம் கூட்டிய பிறகு அதன் தாக்கத்தில் இருந்து ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முதல் நான்கு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றார் திரு வோங்.
உதவிகள் குறித்த மேல்விவரங்களை மனிதவள அமைச்சு பின்னர் வெளியிடும் என்றார் அவர்.
மத்திய சேமநிதி விகிதம் கூட்டுவது 2024 ஆண்டின் நடுப்பகுதியில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி சொந்தமாக வேலை செய்பவர்கள், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் அவர்கள் ஊதியத்தில் 10.5 விழுக்காட்டை மத்திய சேமநிதியின் மெடிசேவ் கணக்கில் செலுத்த வேண்டும்.