சிங்கப்பூரின் குறுக்குத் தீவு ரயில் தடத்துக்காக நிலப் போக்குவரத்து ஆணையம் ஆறு ரயில் பெட்டிகளைக் கொண்ட 44 ரயில்களை வாங்கியுள்ளது.
அந்தத் தடத்தின் முதல் கட்ட சேவை 2030ஆம் ஆண்டு தொடங்கும். அதற்கு முன்னர் 2027ஆம் ஆண்டு ரயில்கள் தருவிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
இது தொடர்பான $589மில்லியன் ஒப்பந்தத்தை சிஃபாங் ரயில்வே வெஹிக்கல் சர்விஸ், சிங்கப்பூர் சிஆர்ஆர்சி ரயில்வே வெஹிக்கல்ஸ் சர்விஸ் குழுமத்துக்கு வழங்கியுள்ளதாக ஆணையம் கூறியது.
இந்த ஒப்பந்தத்தில் ஆணையம் மேலும் 11 ரயில்கள் வாங்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரயில் நிறுவனக் குழுமம் நீண்டகால பராமரிப்பு சேவை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த முழு தானியக்க முறையிலான புதுவகை சிஆர்எல் ரயில்கள் சீனாவின் கிங்டாவ் நகரில் தயாரிக்கப்படும் என்றும் ஆணையம் விளக்கியுள்ளது.
ஒவ்வொரு ரயிலிலும் பயணிகள் விரைவாக நுழைய, வெளியேற வசதியாக தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தில் சேவையில் உள்ள ரயில்களைப் போல் இருபக்கங்களிலும் தலா ஐந்து கதவுகள் இருக்கும்.
மற்ற ரயில் தடங்களில் உள்ள ரயில்களில் இரு பக்கங்களிலும் தலா நான்கு கதவுகள் மட்டுமே உள்ளன.
மேலும், ஒரு ரயில் பெட்டிகளுக்கு இடையேயான இணைப்புப் பாதை 1.6மீட்டர் அகலத்தில் இருக்கும். இது தற்போது மற்ற ரயில் பெட்டிகளுக்கு இடையே இருக்கும் 1.4மீட்டர் அளவிலான இணைப்புகளை விட அதிக அகலம் கொண்டது.
இதனால், பயணிகள் ரயில் பெட்டிகளுக்கு இடையே செல்வது எளிதாக இருக்கும்.
மேலும், புதிதாக வரவிருக்கும் ரயில்கள் சிக்கனமான எரிசக்திப் பயன்பாட்டுடன் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் புதிய சிஆர்எல் ரயில்களில் இயந்திரக் கோளாறை காலதாமதமின்றிக் கண்டறியும் முறையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.