சிங்கப்பூரின் தொழில்கள் நிறைந்த தென்மேற்குப் பகுதியை உயரும் கடல் மட்டத்திலிருந்து பாதுகாப்பதற்கான ஆறு ஆண்டு ஆய்வு இவ்வாண்டுப் பிற்பகுதியில் தொடங்குகிறது.
தலைநிலத்துக்கும் ஜூரோங் தீவுக்கும் இடையே கடலோரத் தடுப்புகளை கட்ட முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வில் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
துவாஸ் முதல் பாசிர் பாஞ்சாங் வரையிலான 116 கிலோ மீட்டர் தூர கடலோரப் பகுதிகள் குறித்து தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியூபி) ஆய்வு செய்கிறது.
“இது, இதுவரை இல்லாத ஆகப்பெரிய கடலோர ஆய்வாகும். கடலோரப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு வெள்ளங்களைத் தடுப்பதற்கான தீர்வுகளை உருவாக்க ஆறு ஆண்டுகள் ஆகும்,” என்று கழகத்தின் வெள்ளத் தடுப்பு திட்டமிடல் துறையின் இயக்குநர் ரிட்சுவான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கான ஒப்பந்தக் குத்தகையை வரவேற்கும் அறிவிப்பை கழகம் மார்ச் முடிவில் வெளியிட்டது. அதில் பாசிர் பாஞ்சாங் முனையம் 2040களில் காலி செய்யப்படலாம் அல்லது மறுபடியும் மேம்படுத்தப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப சுற்றுப்புற நீர் நிலப்பகுதிகளை மீட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் வழியாக நியமிக்கப்படும் ஆலோசனை நிறுவனம், பெரும்பாலான கடலோரப் பகுதிகளையும் மற்றும் உள்ளூர் கடலோரப் பகுதிகளின் உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு இடங்களையும் பாதுகாக்க பெரிய அளவிலான அரசாங்கத்துக்குச் சொந்தமான தடுப்புகளை அமைப்பது குறித்து முடிவு செய்ய கழகத்திற்கு உதவி செய்யும்.
பெரிய அளவிலான கடலோரத் தடுப்புகள் என்பது வாயில்கள் அல்லது அணைகள் போன்ற அமைப்புகளைக் கட்டுவதாகும். இது, கடல்களுக்கு அப்பால் புயல்களால் ஏற்படும் பேரலைகளின் உயரத்தைவிடப் பெரிதாக இருக்கும்.
சிங்கப்பூரின் தொழில்களுக்கும் கப்பல்துறைக்கும் தென்மேற்கு கடலோரப்பகுதி முக்கிய அங்கம் வகிக்கிறது. துவாஸ் துறைமுகம், ஜூரோங் தொழிற்பேட்டை, ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்ற பொழுதுபோக்கு வளாகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மேலும் வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரின் கப்பல் போக்குவரத்தும் துறைமுக நடவடிக்கைகளும் துவாஸ் துறைமுகத்தில் ஒருங்கிணைக்கப்படவிருக்கின்றன.
சிங்கப்பூரின் கடல் மட்டம், 2,100ஆம் ஆண்டில் 1.15 மீட்டர் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் அல்லது சூறாவளி ஏற்பட்டால் கடல் மட்டம் ஐந்து மீட்டர் வரை உயரும் அபாயமுள்ளது.
பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூரின் கடலோரங்களை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து ஆய்வு செய்கிறது. ஒவ்வொன்றையும் அணுக்கமாகக் கண்காணித்து அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பது அதன் நோக்கமாகும்.
லிம் சூ காங் முதல் உட்லண்ட்ஸ் மற்றும் ஜூரோங் தீவு வரையிலான பகுதி தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. செந்தோசாவுக்கான ஆய்வு இவ்வாண்டு பிற்பகுதியில் தொடங்கும். தெற்மேற்கு கடலோரப் பகுதி, துவாஸ் சோதனைச் சாவடி முதல் லிம் சூ காங் வரையிலான ஆய்வு 2025ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
தென்கிழக்கு கடலோரப் பகுதி, பாசிர் பாஞ்சாங் படகு முனையத்திலிருந்து சாங்கி வரை நீண்டுள்ளது.
கடலோரத் தடுப்புகளை அமைப்பது, கடலோரங்களை உயர்த்துதல், சாங்கி கடற்கரையில் கரைகளை உருவாக்குதல் உள்ளிட்டவை ஆய்வில் பரிந்துரைக்கப்படவிருக்கிறது.

