வடக்கு கிழக்கு ரயில் பாதையில் உள்ள 25 முதல் தலைமுறை ரயில்கள் அனைத்தும் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கடைசியாக மேம்படுத்தப்பட்ட ரயில் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் பயணிகள் சேவைக்குத் திரும்பியது என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் புதன்கிழமையன்று (ஏப்ரல் 29) தெரிவித்தது.
மேம்பாட்டுப் பணிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் செங்காங் பணிமனையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட ரயிலில் உள்ள புதிய அம்சங்களை பார்வையிட்டார்.
புதிய இருக்கைகள், சுவர் பலகைகள், எல்இடி விளக்குகள், கைப்பிடிகள், பிடிக்கம்பங்கள் ஆகியவை இந்த மேம்பாட்டில் அடங்கும்.
நிலையான ரயில் பாதை வரைபடங்களுக்குப் பதிலாக, நிகழ்நேரத் தகவல்களையும் கதவு திறக்கும் குறியீடுகளையும் வழங்கும் மின்னிலக்கத் திரைகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய குளிர்சாதன வசதி மற்றும் காற்றோட்ட அமைப்பு, கூட்டத்தின் அளவைப் பொறுத்து செயல்படுகிறது. இதனால் குளிர்ச்சியும் எரிசக்திப் பயன்பாடும் மேம்படுகின்றன.
மேம்படுத்தப்பட்ட இந்த ரயில்களில், ரயிலின் செயல்திறனை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது குறைகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்ய அனுமதிக்கிறது. ஒருங்கிணைந்த வாகனப் பராமரிப்பு மேலாண்மை அமைப்பு நிகழ்நேரத்தில் 8,000க்கும் மேற்பட்ட தரவுப் புள்ளிகளைக் கண்காணிக்கிறது.
இந்த மேம்பாட்டிற்கு முன்பு, இது 300 முதல் 500 தரவுப் புள்ளிகளை மட்டுமே கண்காணித்தது. மேலும், ரயில்கள் மீண்டும் பணிமனைக்குத் திரும்பிய பின்னரே தகவல்களைப் பெற முடியும்.
தொடர்புடைய செய்திகள்
இப்போது, தொலைதூரக் கண்காணிப்பிற்காகத் தரவுகள் நிகழ்நேரத்தில் அனுப்பப்படுகின்றன. இதனால், கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்ய முடிகிறது.

