மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் 3,000 அட்டைப் பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டதாகவும் அதனைத் தடுத்து பறிமுதல் செய்ததாகவும் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
துவாஸ் சோதனைச் சாவடியில் ஜூன் மாதம் 26ஆம் தேதி, பணியில் இருந்தபோது சந்தேகத்தின்பேரில் லாரி ஒன்றில் இருந்த சரக்குகளை அங்கிருந்த அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது, லாரியில் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பிடிபட்டன.
ஐசிஏ அதிகாரிகள் 40 வயது மலேசிய லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கடன் அந்த ஓட்டுநர் விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் எல்லைகளைப் பாதுகாப்பாகவும் வர்த்தகத்துக்கு ஏற்ற முறையில் இருப்பதை உறுதி செய்யவும் தனது கடப்பாட்டை அதன் அறிக்கையில் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது.

