பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிகிச்சை நிலையங்களில் பதிவுசெய்யப்படாத ஹைட்ரஜன் சுவாசக் கருவிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
கண் சிகிச்சை, நுரையீரலைத் தூய்மைப்படுத்தும் சிகிச்சை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோஜன் சுவாசக் கருவிகள், நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவை என்றும் நிலையங்கள் அதிகம் கூறிவருகின்றன.
மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பதிலாக சுவாசக் கருவிகளைப் பயன்படுத்த முடியாது என்று விற்பனையாளர்கள் எச்சரித்தாலும் கண்புரை, நீரிழிவு, ஆஸ்துமா, புற்றுநோய் ஆகியவற்றை ஹைட்ரஜன் சுவாசக் கருவிகள் மூலம் குணமாக்க முடியும் என்று ஒருசிலர் கூறுகின்றனர்.
ஹைட்ரஜனை சுவாசிக்க உதவும் கருவிகள் மூலம் ஹைட்ரஜன் வாயு நிறைந்த குடிநீரையும் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
அத்தகைய கருவிகள் 7,000 ரிங்கிட்டிலிருந்து 8,000 ரிங்கிட்வரை விற்கப்படுகின்றன.
அதிகாரிகளிடம் அந்தக் கருவிகள் பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் மலேசியாவின் மருத்துவக் கருவிகள் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் அதுகுறித்த எந்தத் தகவலும் இல்லை.
அதுபோன்ற பதிவுசெய்யப்படாத கருவிகளைப் பயன்படுத்தவேண்டாம் என்று பொதுச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்தனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைட்ரஜன் சுவாசக் கருவிகள் நல்ல பலன் தரும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்று அவர்கள் சுட்டினர்.
கருவிகள் பாதுகாப்பானவையா என்றும் பயனீட்டாளருக்குப் பயனளிக்குமா என்றும் நீண்டகால ஆய்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை என்றனர் வல்லுநர்கள்.
அனைவருக்கும் பலன் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது என்பதால் பயனீட்டாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஹைட்ரஜனை சுவாசிக்க உதவும் கருவிகள் தரமாக இல்லாவிட்டால் குளோரின் போன்ற நச்சுவாயுக்கள் உண்டாகலாம்.


