ஆறு ஆண்டுகளாகத் தன்னைப் பெற்றவர்களை சிங்கப்பூரில் தேடி வருகிறார் மலேசியாவைச் சேர்ந்த ஒரு மாது.
63 வயது நஸ்லி அப்துல்லா 1959ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். பிறந்தவுடன் மலேசியாவின் கோத்தா பாரு நகரில் உள்ள ஜாலான் தெலிபோட் பகுதியில் அண்டை வீட்டாரிடம் தத்துக்கொடுக்கப்பட்டார்.
திருவாட்டி நஸ்லியின் உண்மையான தந்தையின் குடும்பப் பெயர் செயா என்று இவரின் மறைந்த வளர்ப்புத் தந்தைக்கு வேலை செய்த ஒருவர் கூறியிருக்கிறார். இவரைத் தத்துக்கொடுத்த பிறகு பெற்றோர் அவர்கள் வசித்து வந்த கிராமத்திலிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
"எனது பூர்வீகத்தை ஒருவழியாகத் தெரிந்துகொள்ள முற்படுகிறேன். எனது வளர்ப்புப் பெற்றோரும் உறவினர்களும் உயிருடன் இருந்தபோது 2016ஆம் ஆண்டுக்கு முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்," என்றார் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வாழும் திருவாட்டி நஸ்லி.
தான் ஒரு வளர்ப்பு மகள் என்பது திருவாட்டி நஸ்லிக்கு 25 வயதில்தான் தெரியவந்தது.


