சைனாடவுனுக்கு அருகில் உள்ள மேக்ஸ்வெல் உணவு நிலையத்தில் 48 வயது மாதை, 41 வயது ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலில் அந்த மாது உயிரிழந்தார்.
கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய அந்த ஆடவர்மீது ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) கொலைக் குற்றம் சுமத்தப்படும்.
புக்கிட் மேரா ஈஸ்ட் அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்குச் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.36 மணியளவில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக ஆடவர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் கடையநல்லூர் சாலையில் இருக்கும் உணவங்காடி நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு மாது ஒருவர் அசைவின்றிக் கிடந்தார். மேக்ஸ்வெல் உணவங்காடி நிலையம் கடையநல்லூர் சாலைக்கு அருகில் உள்ளது.
இச்சம்பவம் குறித்து செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.35 மணிக்குச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அந்த மாது உயிரிழந்ததைச் சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

