கொவிட்-19 காலகட்டத்தில் அரசாங்கம் அறிமுகம் செய்த வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் $8,901.90 மதிப்புள்ள மானியங்களைப் பெற முயன்றதாகச் சந்தேதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏமாற்றியதாகவும் பொய்க் கையெழுத்து இட்டதாகவும் 65 வயது ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வோங் பூன் லிம் என்ற அந்த ஆடவர், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தை ஏமாற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது.
தனக்குச் சொந்தமான துப்புரவு நிறுவனத்தில் ஜாப் ஹுயி லான் என்பவர் பயற்சி பெற்றுக்கொண்டிருந்தார் என்று வோங் பொய் கூறியதாகக் குற்றம் கூறப்படுகிறது.
ஜாப், 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ‘ஹூட்டன் இண்டீரியர் செர்வீசஸ்’ நிறுவனத்தில் பணியாற்றியதாக வோங் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ‘எஸ்ஜி ஒற்றுமை இயக்கத்தின் பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் பாதைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. வேலை தேடுவோர் நிறுவனங்களில் குறுகியகாலப் பயிற்சியில் சேர்வதற்கு அது ஆதரவு அளிக்கும்.
மானியங்களுக்காக வோங் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் முறைகேடுகள் இருந்ததைக் கண்டுபிடித்த பிறகு, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் அவருக்கு மானியங்களை வழங்கவில்லை என்று காவல்துறை கூறியது.