டெக் வாய் லேனில் இரண்டு காவல் அதிகாரிகளைக் காயப்படுத்திய சந்தேகத்தின்பேரில் 71 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வாக்கில் டெக் வாய் லேன், புளோக் 143லிருந்து காவல்துறையினருக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவிக்கப்பட்டது.
டிக்டாக் பயனர் பூன் லியோங் என்பவர் பதிவேற்றம் செய்த காணொளியில், இரண்டு காவல் அதிகாரிகள் நீல நிறச் சட்டை அணிந்திருந்த ஆடவர் ஒருவரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ததைக் காணமுடிந்தது. காவல் அதிகாரிகள் அவருக்குக் கைவிலங்கு மாட்டுவதை அவர் தடுப்பதுபோல் தெரிந்தது.
அந்தச் சம்பவத்தில் அதிகாரிகளுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை.
அரசாங்க ஊழியர் ஒருவரைக் காயப்படுத்தியதற்காக அந்த ஆடவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத் தொகுப்பின்கீழ், அரசாங்க ஊழியர் ஒருவரைக் காயப்படுத்தி, கடமையைச் செய்வதிலிருந்து அவரைத் தடுத்ததற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டுவரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

