சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் 20 வயது இளம் ஆடவர் மீது வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 30) தேதி குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் மானபங்கச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விமானப் பயணத்தின்போது, அந்த ஆடவர் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவரைத் தகாத முறையில் தொட்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து அந்தப் பெண் பயணி தனது இருக்கையை விட்டு எழுந்து சென்று விமானச் சிப்பந்தியின் உதவியை நாடியதாகவும் அவர்கள் இந்த விவகாரம் குறித்து விமானியிடம் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.
சாங்கி விமான நிலையத்தை விமானம் அடைந்ததும் விமான நிலையக் காவல்துறைப் பிரிவு அதிகாரிகளால் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இந்தத் தண்டனைகளில் பலவும் சேர்ந்தோ விதிக்கப்படலாம்.

