பேருந்து சன்னல்மீது கண்ணாடி போத்தலை வீசி பயணியைக் காயப்படுத்தியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பெண் பயணியின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
ஜூலை 5ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் பேருந்துச் சேவை எண் 190 ஆர்ச்சர்ட் ரோட்டில் இருந்தபோது குஸ்டாஸா கமருடின், 38, பாதசாரிகளுக்கான நடைபாதையிலிருந்து கண்ணாடி போத்தலை வீசியதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சிங்கப்பூரரின் செயலால் இரண்டு அடுக்கு பேருந்து சன்னலில் சிறிய துவாரம் ஏற்பட்டது. மேலும் 57 வயது பயணிக்கு அவரது இடது கன்னத்தில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
சுயநினைவுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவத்திற்குப் பிறகு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று கவனித்ததாக எஸ்எம்ஆர்டியின் துணை நிர்வாக இயக்குநர் வின்செண்ட் கே தெரிவித்தார்.
பயணிகள் மற்றொரு பேருந்துக்கு மாற்றிவிடப்பட்டனர்.
ஹீரன் கடைத் தொகுதிக்கு அருகே பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை ஊடகங்களில் பதிவேற்றப்பட்டப் படங்கள் காட்டின.