அடகுக் கடையிலிருந்து $12,000க்கும்மேல் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 21 வயது முஹம்மது டேனியல் ஷருதீன் முஹம்மது நூர்மீது திங்கட்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றத்தை தண்டனைக்காலக் குறைப்பு ஆணையின்கீழ் இருந்தபோது அவர் புரிந்ததாக கூறப்படுகிறது.
ரோச்சோர் சாலைக்கு அருகிலுள்ள குவீன் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ‘மேக்சிகேஷ்’ எனும் அடகுக் கடையிலிருந்து தங்கச் சங்கிலி, தங்க மோதிரம் ஆகியவற்றை டேனியல் திருடியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருட்டு தொடர்பாக கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக தனக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.
“நகைகளை எடுத்துக்கொண்டு டேனியல் ஓடியபோது, அந்த அடகுக் கடையின் ஊழியர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. பின்னர், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது,” எனக் காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
கண்காணிப்புப் புகைப்படக் கருவியில் பதிவான புகைப்படங்களை வைத்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், புகார் அளிக்கப்பட்ட எட்டு மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டார் என அவர் மேலும் கூறினார்.