மரணம் விளைவிக்கவல்ல ஆயுதத்தைக் கொண்டு சண்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது ஆடவர் ஒருவரும் 16 வயதுடைய இருவரும் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
கோல்மன் ஸ்திரீட்டில் உள்ள மதுபானக்கூடம் ஒன்றில் ஆயுதங்களைக் கொண்டு சண்டை நடப்பதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 3.17க்குத் தகவல் கிடைத்ததாய்க் காவல்துறை தெரிவித்தது.
அவ்விடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், அங்கு ஆடவர் இருவர் காயமடைந்திருந்ததைக் கண்டனர். ஒருவருக்கு 29 வயது. மற்றொருவருக்கு வயது 43.
அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை ஆடவர் சிலர் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் ஒலிவாங்கியும் கைப்பற்றப்பட்டன.
25 வயது ஆடவர்மீதும் பதின்ம வயதிலிருக்கும் இருவரில் ஒருவர்மீதும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.