சீருடை அணிந்திருக்கும் ‘எனிமே’ சிறுமிகள்மீது ஈர்ப்பு இருப்பதாகக் கூறிய ஆடவர் ஒருவர் மூன்று தொடக்கப்பள்ளி மாணவிகளை மானபங்கப்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த மாணவிகள் 11க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
11 வயதுச் சிறுமியை மானபங்கப்படுத்திய குற்றச்சாட்டை கீரொன் இங் கே லின் செப்டம்பர் 19ஆம் தேதி ஒப்புக்கொண்டார். 12, 14 வயது நிரம்பிய மற்ற இரண்டு சிறுமிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் தீர்ப்பு வழங்கப்படும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
அந்த மூன்று சிறுமிகளைத் தவிர, மேலும் பல சிறுமிகளின் கால்களை அவர் தொட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
அத்தகைய செயல்களை 2021ஆம் ஆண்டிலிருந்து செய்துவந்ததை இங் ஒப்புக்கொண்டதாக மனநலக் கழகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அந்த 11 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது இங் அவரை அணுகினார்.
அதன் பின்னர் இங் அந்தப் பெண்ணை மாடிப்படி ஒன்றுக்கு அழைத்துச்சென்று அவரின் கால்களைத் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சிறுமி இங்கிடம் நிறுத்தச் சொன்னார். இருப்பினும், தாம் வீடு திரும்பி பள்ளிப் பாடங்களைச் செய்யவேண்டும் என்று அச்சிறுமி கூறிய பிறகு மட்டுமே, இங் நிறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டுக்கு அழுதுகொண்டே சென்ற சிறுமி, தமது தாயாரிடம் நடந்ததைப் பற்றிக் கூறினார். இங் அதே நாளன்று கைதுசெய்யப்பட்டார்.
வழக்கு வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


