சிலேத்தார் விரைவுச்சாலையில் தனியார் மருத்துவ உதவி வாகனத்திலிருந்து 61 வயது ஆடவர் ஒருவர் கீழே குதித்தார்.
திங்கட்கிழமை (ஜூன் 15) நடந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில் அந்நபர், பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவசரகால வாகனமான அந்த மருத்துவ உதவி வாகனம் சாலையோரப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில், அதிலிருந்து கீழே குதித்த ஆடவர் மீது பேருந்து ஒன்று மோதியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் அறிகிறது.
பிற்பகல் 2.40 மணியளவில், லென்டோர் அவென்யூவை நோக்கிய வெளிவாயிலுக்கு அடுத்து, பொங்கோலை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
61 வயது நபர் ஒருவர் சுயநினைவோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை மேலும் குறிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.

