விமானத்தில் இருந்தபோது பயணி ஒருவரின் பையிலிருந்து $100,000க்கு அதிகமாக திருடிய சந்தேகத்தின்பேரில் 54 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை மார்ச் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்தப் பயணி சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும், தமது பையில் இருந்து 80,000 அமெரிக்க டாலர் (S$107,488) காணாமல்போயிருந்ததை உணர்ந்ததாக காவல்துறை கூறியது.
விமானத்தில் பயணி அவரது பையை மேற்பகுதியில் வைத்திருந்தார் என்றும், சந்தேகத்துக்குரிய நபர் அதனைத் துருவித் தேடுவதை அவர் பார்க்கவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கூறியது.
விமான நிலையக் காவல்துறைப் பிரிவின் அதிகாரிகள் உடனடியாக விமானப் பதிவுகளை ஆராய்ந்து, ஆடவரின் அடையாளத்தை உறுதிசெய்ய வர்த்தக விவகாரப் பிரிவுடன் இணைந்து செயல்பட்டனர்.
“அந்த ஆடவர் பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொதியில் S$37,897.70 பெறுமான பணத்தை அனுப்புதவற்கு நான்கு பரிவர்த்தனைகளைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுவதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின. அந்தத் தொகை, திருடப்பட்ட பணத்தில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது,” என்று காவல்துறை கூறியது.
காவல்துறை அந்தப் பரிவர்த்தனைகளைச் சரியான நேரத்தில் நிறுத்தி, அதே நாளன்று அந்த ஆடவரைக் கைதுசெய்தது. அவரிடம் $79,662.83 இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவர்மீது நீதிமன்றத்தில் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.