திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 29 வயது ஆடவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
36, ராபின்சன் ரோட்டில் உள்ள கட்டடம் ஒன்றின் அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆகஸ்ட் 24ஆம் தேதி நண்பகல் 12.10 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அவர்கள் கூறினர்.
அலுவலகத்தின் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதும், அந்த ஆடவர் அங்கிருந்து தப்பியோடி, வேறொரு மாடியில் உள்ள காலியான அறையில் ஒளிந்துகொண்டார். இருப்பினும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான படங்கள் மூலம், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இறுதியில் கண்டுபிடித்தனர்.
காவல்துறையினர் அங்குச் சென்றடைந்ததும், கதவைத் திறந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவர் இரும்புக் கழி ஒன்றைக் கொண்டு அலுவலகத்தின் கதவைத் திறக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின. அந்த இரும்புக் கழி ஆதாரத்துக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.
கன்னக்களவுக்காக அந்த ஆடவர்மீது ஆகஸ்ட் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.


