ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் கீழ் 59 வயது ஆடவர் திங்கட்கிழமை (ஜனவரி 6) கைது செய்யப்பட்டார்.
பிடோக் வட்டாரத்தில் உள்ள காப்பி கடை ஒன்றில் ஆடவர் ஒருவர் ரத்தம் படிந்த ஆடையுடன் அமர்ந்திருக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
ஆடவருடன் இரண்டு காவல்துறை அதிகாரிகள் இருப்பதையும் காணொளியில் பார்க்க முடிந்தது. மேலும், ஆடவர் தலையில் ரத்தக்கறை படிந்த ஒரு துணியும் இருந்தது.
இச்சம்பவம் தொடர்பாகத் திங்கட்கிழமை மாலை 6.30 மணிவாக்கில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நியூ அப்பர் சாங்கி சாலையில் உள்ள புளோக் 56க்கு விரைந்ததாகத் தெரிவித்தனர்.
சண்டையில் எந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இச்சம்பவத்திற்குத் தொடர்புடைய மேலும் ஒரு 59 வயது ஆடவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.