பிடோக் ரெசவாயர் ரோட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) இரவு மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை ஓட்டிய குற்றத்துக்கு 27 வயது ஆடவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அன்றிரவு 10.20 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) கூட்டாகத் தெரிவித்தன.
விபத்தில் காயமடைந்த 50 வயதும் 27 வயதும் நிரம்பிய இரண்டு ஆடவர்கள் சாங்கி மருத்துவமனைக்கு சுயநினைவுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறிய காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர் என்று எஸ்சிடிஎஃப் கூறியது.
சம்பவத்தில் இரண்டு மின்சிகெரெட்டுகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டன. அது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் (ஹெச்எஸ்ஏ) விசாரணை நடத்துவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கறுப்பு நிறக் கார் ஒன்று சாலைத் தடுப்பைக் கடந்து பேருந்து நிறுத்தத்தின் மேல் தளத்தில் ஏறிநிற்பதையும் அதன் அருகில் இரண்டு கறுப்பு நிறக் கார்கள் சேதத்துடன் சாலையில் முன்னும் பின்னும் இருப்பதையும் காணமுடிந்தது.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.


