யீஷூன் வட்டாரத்தில் வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி சாலையோரத்தில் இருந்த விளக்குக் கம்பம் மீது மோதிய 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடவர் கார் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் காரை ஓட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் குறித்து திங்கட்கிழமை (ஜூன் 5) இரவு 7:30 மணி வாக்கில் தங்களுக்கு தகவல் வந்ததாக காவல்துறைத் தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து விபத்து நடந்த இடமான யீஷூன் அவென்யூ 6 நோக்கிச் செல்லும் யீஷூன் அவென்யூ 1க்கு அதிகாரிகள் விரைந்ததாகக் காவல்துறை கூறியது.
விபத்தில் வேன் ஒன்றும் சிக்கியது. வேன் ஓட்டுநர் விசாரணைக்கு உதவிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை அதிகாரிகள் கூறினர்.
விபத்து குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் காரின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. விளக்குக் கம்பம் சாய்ந்திருந்தது. விபத்துக்குள்ளான காரை இழுத்து செல்லும் வாகனமும் அதில் இருந்தது.