ஈசூனில் ஒரு பொது இடத்தில் தகாத செயலில் ஈடுபட்ட குற்றத்துக்கு 43 வயது ஆடவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பணியில் இருந்த காவல்துறையினரைத் தகாத சொற்களால் திட்டியதோடு அந்த அதிகாரிகளை நோக்கி எச்சில் உமிழ்ந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3) மாலை 5 மணியளவில் புளோக் 381C ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள வீடமைப்புக் கட்டடத்தின் 12வது மாடியில் ஏற்பட்ட தீச்சம்பவத்தின்போது அந்த ஆடவர் அவ்வாறு நடந்துகொண்டார்.
அக்கட்டடத்தில் இருந்து 25 குடியிருப்பாளர்களை வெளியேற்ற காவல்துறையினர் உதவியபோது ஆடவர் அவர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தியுள்ளார்.
தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருடன் (எஸ்சிடிஎஃப்), தீயணைப்புப் பணியில் ஈடுபட்டபோது ஆடவரை எதிர்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆடவரைக் காவல்துறை அணுகியபோது அவரது செயல்பாட்டை நிறுத்தாததோடு அவர்களை நோக்கி எச்சில் உமிழ்ந்ததையும் காவல்துறை குறிப்பிட்டது.
பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளைச் செயல்படவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளை அவர்கள்மீது உபயோகித்தது ஆகிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின்போது அந்த ஆடவர் வாந்தி எடுத்ததோடு, மயங்கி விழுந்ததாக அங்கு நேரில் இருந்தவர்கள் கூறினர்.
உதவி கோரி அழைப்பு வந்தபிறகு, இரவு 7.25 மணியளவில் அவரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.

