பிடோக்கில் உள்ள பலமாடி கார்நிறுத்தகத்தில் மோட்டார்சைக்கிளைத் திருடிய 31 வயது ஆடவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவர்மீது சனிக்கிழமை (ஜூலை 4) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் சம்பவத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
பிடோக் சவுத் ரோட்டில் உள்ள வாகனநிறுத்துமிடத்தில் ஜூன் 28ஆம் தேதி மாலை 2.20 மணிக்கு மோட்டார்சைக்கிள் களவுபோனது குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
பிடோக் காவல்துறையினரும் மத்திய தளபத்திய நிலையத்தின் அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
காவல்துறையின் கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் நடந்த தொடர் விசாரணைகளின் வழியாக அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.
திருடப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளைத் திருடிய குற்றம் ஆடவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுச் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
வாகனங்களில் அவற்றின் சாவிகளை மறந்து வைத்துச் செல்வதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது.
குறிப்பாக மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களை இயக்கக்கூடிய மின்கருவிகளையும் கூடுதலாக உள்ள சாவிகளையும் அவற்றின் உட்பகுதிகளில் வைத்துச்செல்ல வேண்டாம் எனவும் நினைவூட்டி உள்ளனர்.

