போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் சந்தேகத்தின் பேரில் 40 வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் நவம்பர் 30ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் புளோக் 433A புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் இருந்து உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது ஆடவர் ஒருவர் தன்னைத்தானே அடித்துக்கொண்டு அலறி அழுவதைக் காண முடிந்ததாகவும் காவல்துறையினர் அவரை நெருங்கியபோது, அந்த ஆடவர் முரட்டுத்தனமாகக் கத்திக்கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அரசு ஊழியர் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்து அவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
காயமுற்ற சந்தேக நபர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார் என்றும் தாக்குதலுக்கு உள்ளான 21 வயது காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அறியப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.