தொழிலாளர் தினத்தன்று அதிகாலையில் கிளார்க் கீ வட்டாரத்தில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் 28 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து வெள்ளிக்கிழமை (மே 1) அதிகாலை 2 மணிக்குத் தெரியவந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. ரிவர் வேலி ரோட்டில் கார் சறுக்கியிருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எவருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
வாகனத்தின் உள்ளே இருந்த ஒளிப்பதிவுக் கருவியில் பதிவான காட்சிகள் இணையத்தில் பரவுகின்றன. ரிவர் வேலி ரோட்டில் மெதுவாகப் போன வெள்ளை கார், ‘சிகியூ@கிளார்க் கீ’ கடைத்தொகுதியைக் கடந்துசென்றது.
விளக்குச் சமிக்ஞையைப் பயன்படுத்தாமல் கார், ஒரு தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு மாறுவதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
ஒரு கட்டத்தில், கார், சாலைத் தடுப்பின்மீது கிட்டத்தட்ட ஏறப்போவதுபோல் சென்றது.
அதன் முன்பக்கச் சக்கரம் சேதமடைந்ததைப் போன்று காணொளியில் தெரிகிறது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

