ஈசூனில் உள்ள கழக வீட்டின் நடைப்பாதையில் தவழ்ந்து சென்று திருட முற்பட்டதாக நம்பப்படும் ஆடவரைக் காவ்லதுறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
ஆடவர் தவழ்ந்து சென்று செருப்பைத் திருட முயன்ற காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
இம்மாதம் 25ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் சாம்பல் நிற சட்டை அணிந்த ஆடவர் ஒருவர் வீடுகளுக்கு வெளியில் உள்ள நடைப்பாதையில் தவழ்ந்துசென்று செருப்பைத் திருட முயலும் கண்காணிப்புக் கேமரா காணொளியை சிக் என்பவர் ஸ்டோம்புடன் பகிர்ந்துகொண்டார்.
தொடக்கத்தில் செருப்புடன் அங்கிருந்து சென்ற ஆடவர் புதிதாகப் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவைக் கண்டு எடுத்த இடத்திலேயே மீண்டும் செருப்பை வைப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.
ஈசூன் ரிங் ரோட்டில் திருட்டு குறித்து சந்தேகத்திற்குரிய ஒருவர் நடமாடுவது குறித்தும் காவல்துறை பல புகார்களை இதற்குமுன் பெற்றுள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி, வீட்டிற்கு வெளியில் உள்ள நடைபாதையில் உள்ள தமது ஆடையை ஆடவர் ஒருவர் திருடியதாகப் பெண் ஒருவர் புகாரளித்தார்.
ஒரு நாள் கழித்து வீட்டிற்கு வெளியில் காய வைத்திருந்த உடைகளைக் காணவில்லை என்று மற்றொருவர் புகாரளித்தார்.
இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை வீடுகளுக்கு வெளியே சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டதாகப் பல புகார்கள் அளிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரிகள் மேற்கொண்ட் விசாரணை, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான படங்கள் ஆகியவை மூலம் உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு 48 வயது ஆடவரை அடையாளங்கண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அவரைக் கைதுசெய்தனர்.
பெண்ணிடமிருந்து திருடப்பட்ட ஆடையும் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டது.
ஆடவர்மீது சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) நீதிமன்றத்தில் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டது. அத்தகைய குற்றத்துக்கு மூவாண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.