ஞாயிற்றுக்கிழமை காலை (பிப்ரவரி 9ஆம் தேதி) கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் அங்குள்ள பாதிரியாரைத் தாக்க முயற்சி செய்ததாக 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை தனது ஃபேஸ்புக் பதிவில் சர்ச் ஆஃப் த ஹோலி ஸ்பிரிட் என்ற கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து ஏறத்தாழ 10.30 மணிக்கு தங்களுக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் கூறியது. அந்த தேவாலயம் அப்பர் தாம்சன் சாலையில் உள்ளது.
“சர்ச்சில் பிரார்த்தனை முடிந்து அனைவரும் கலைந்துபோகும் சமயம் 22 வயது சிங்கப்பூர் சீன ஆடவர் ஒருவர் பாதிரியாரைத் தாக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என்று காவல்துறை பதிவு கூறுகிறது.
அந்த ஆடவர் வழக்கமாக தேவாலயத்திற்கு வருபவர் என்றும் அவரை தேவாலயப் பாதுகாவலர்கள் உடனடியாக தடுத்து வைத்தனர் என்றும் அந்த விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை விளக்கியது.
அந்த நபரிடம் எந்தவித ஆயுதமும் இல்லை எனக் காவல்துறை தெரிவித்தது. அவர் பின்னர் அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிரியாருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அந்த நபரை பொதுவெளியில் தொல்லை தந்த குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த சந்தேக நபரைப் பரிசோதனை செய்ய அவர் மனநலக் கழகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக காவல்துறை விளக்கமளித்தது.
“இது குறித்து ஊகங்களில் ஈடுபட வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம்,” என்றும் காவல்துறை கூறியது.