காவல்துறை அதிகாரிகள் இருவரைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக 33 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட இருக்கிறது.
இத்தாக்குதல் டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று கிளமெண்டி வட்டாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கிளமெண்டி காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் பிற்பகல் 12.50 மணி அளவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது அந்த ஆடவரைக் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அந்த ஆடவரிடம் போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் பொருள், போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் கருவி, கத்தரிக்கோல், கைப்பேசி ஆகியவை இருப்பது தெரியவந்தது.
அந்தக் கைப்பேசி அவருக்குச் சொந்தமானதல்ல.
தம்மைச் சோதனையிட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைக்க அந்த ஆடவர் மறுத்தார்.
கைது செய்யப்பட்டபோது அவர் மூர்க்கமான முறையில் நடந்துகொண்டு அந்த இரு அதிகாரிகளையும் குத்தி, உதைத்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கைது செய்யப்பட்டதும் இன்னோர் அதிகாரி மீது அவர் எச்சில் துப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
23 வயது அதிகாரி ஒருவருக்கு முகத்திலும் நெஞ்சுப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன.
24 வயது அதிகாரிக்குத் தலையில், நெஞ்சுப் பகுதியில், கரத்தில் காயங்கள் ஏற்பட்டன.
இருவருக்கும் மூன்று நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.