கிளமெண்டி வட்டாரத்தில் நிகழ்ந்த கடன் முதலைத் துன்புறுத்தல் தொடர்பில் 36 வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூன் 15) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை சொன்னது.
கிளமெண்டி அவென்யூ 3ல் உள்ள வீட்டின் நுழைவாயிலில் சிவப்புச் சாயம் ஊற்றப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
புகார் அளிக்கப்பட்ட மூன்று மணிநேரத்துக்குள் 36 வயது சந்தேக நபர் கைதுசெய்யட்டார். கண்காணிப்புக் கேமராவின் உதவியுடன் அவர் அடையாளம் காணப்பட்டார்.
பிடிபட்ட ஆடவரிடமிருந்து சிவப்புச் சாயம் அடங்கிய நான்கு கலன்களுடன் மார்க்கர் பேனா, கடன் முதலையுடன் சம்பந்தப்பட்ட பிற பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடன் முதலை துன்புறுத்தல் தொடர்பான வேறு சம்பவங்களுடனும் ஆடவருக்குத் தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது.
கடன் முதலை துன்புறுத்தலில் முதல்முறை ஈடுபடும் குற்றவாளிக்கு அதிகபட்சம் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை, $5,000லிருந்து $10,000 வரையிலான அபராதம் ஆகியவை விதிக்கப்படக்கூடும். அத்தகையோருக்குக் கட்டாயமாக ஆறு பிரம்படிகள் விதிக்கப்படும்.
கடன் முதலை துன்புறுத்தல் நடவடிக்கை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று காவல்துறை வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
சொத்துகளைச் சேதப்படுத்துவது, தொல்லை தருவது, பொதுப் பாதுகாப்பைச் சீர்குலைப்பது ஆகியவற்றில் ஈடுபட்டோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்தது.

