பொங்கோலில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 25 வயது ஃபிர்ஹான் அகில் முகமது அம்ரான்மீது புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விபத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவரான ஏட்ரியல் சூ யோங் சிங் காயமடைந்து, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து சுமாங் லிங்க் நோக்கிச் செல்லும் சுமாங் வாக்கில் 2022 அக்டோபர் 10ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடந்தது. ஃபிர்ஹான் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்ததைக் கவனிக்காமல் காரை வேகமாக இயக்கியதாகச் சொல்லப்படுகிறது.
அப்போது சாலையைக் கடக்க முற்பட்ட ஏட்ரியல், ஃபிர்ஹானின் கார் மோதி காயமடைந்தார் எனவும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் சுயநினைவின்றி இருந்தார் எனவும் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி மூன்று வாரம் கழித்து உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டது.
விபத்துக்குப்பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஏட்ரியல் தனது பள்ளிச் சீருடையில் சாலையில் கிடந்ததையும் ஒரு பெண்ணும் ஒரு கட்டுமான ஊழியரும் அவரை கவனித்துக்கொண்டதையும் அதில் காணமுடிந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஃபிர்ஹானுக்கு இரண்டிலிருந்து எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.