லெங்கோக் பாரு அண்டை வீட்டுக்காரரைக் கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

லெங்கோக் பாரு அண்டை வீட்டுக்காரரைக் கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
db9d55dd-e458-4c76-b851-fba121909df4
லெங்கோக் பாரு புளோக் 55ன் 16வது மாடியில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் காணப்பட்ட காவல்துறையினர். - படம்: எஸ்பிஎச் மீடியா

லெங்கோக் பாரு அண்டை வீட்டுத் தகராற்றில் 59 வயது ஆடவர் மீது புதன்கிழமை (ஜூலை 22) கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளியான இங் சுவீ செங் காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார். 59 வயது தியாகராஜன் கருணாகரனைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

“சத்தத்தைக் கேட்டால் நான் பொதுமக்களைத் திட்டுவேன். ஒரு குரலைக் கேட்டதால் அதற்கு எதிராக நடந்துகொண்டேன்,” என்று நீதிமன்றத்தில் இங் கூறினார்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனையை எதிர்நோக்குவார்.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) லெங்கோக் பாருவில் ரெட்ஹில் ரோடு அருகே உள்ள புளோக் 55ல் நடந்த சம்பவம் குறித்து அன்று மாலை 5 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை இதற்கு முன்னர் கூறியிருந்தது.

அந்த புளோக்கின் 16வது தளத்தின் மின்தூக்கி வளாகத்தில் தியாகராஜன் அசைவற்றுக் கிடந்ததைத் தாங்கள் கண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் பின்னர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

மறுநாளான செவ்வாய்க்கிழமை சம்பவம் நிகழ்ந்த புளோக்கிற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்றபோது 16வது தளத்தின் நடைபாதையில் ரத்தக்கறைகளைக் கண்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய இரு ஆடவர்களும் 16வது தளத்தில் சில வீடுகள் தள்ளி வசித்துவந்ததாக அங்கிருந்த குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்ததாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர். ஆனால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்