சிங்கப்பூரில் தமது செல்லப் பிராணிகளான 43 பூனைகளை வீடு ஒன்றில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் தனியாக வைத்திருந்த ஆடவர் ஒருவர்மீது மார்ச் 6ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இரண்டு பூனைகள் மாண்டன. அவை இரண்டும் மிக மோசமான நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான 31 வயது முஹம்மது டானியல் சுகிர்மான் மீது விலங்குகள், பறவைகள் சட்டத்தின்கீழ் 44 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த 43 பூனைகளுக்குத் தேவையற்ற வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாலும், விலங்குநல, மருத்துவச் சேவை அதிகாரி ஒருவரைச் சந்திக்க தவறியதாலும் அந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் ஆறாவது மாடியில் உள்ள காலியான வீட்டில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் இடையே, டானியல் கவனிப்பு ஏதுமின்றி அந்த 43 பூனைகளையும் வைத்திருந்ததாக குற்றப் பத்திரிக்கைகள் காட்டின.
வீட்டில் வசிக்கும் சூழல் மோசமாக இருந்தது என்றும், அவர் செல்லப் பிராணிகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
டானியல் மார்ச் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்.