செம்பவாங் பூங்கா இணைப்புப் பகுதியில் சைக்கிள் ஓட்டுவதை திரு ரோனி ஆங், 60, ரசித்து வந்தார்.
ஆனால், 2022 ஜூலை 4ஆம் தேதி அவரது சைக்கிள் பயணமே கடைசியானதாக அமைந்தது. குளவிகள் கொட்டியதால், மூன்று நாள்கள் கழித்து அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திரு ஆங்கின் மரணம் குறித்த தமது முடிவுகளை மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) வெளியிட்டார். திரு ஆங்கிற்கு ஏற்பட்டது, துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம் என்று அவர் தீர்ப்பளித்தார்.
திரு ஆங்கிற்கு ஏற்கெனவே இருந்த இதயப் பிரச்சினை, அவரது மரணத்திற்குப் பங்களித்திருக்கலாம் எனக் கூறிய திரு நகோடா, அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பு நியாயமான ஒன்றே என்றார்.
என்றாலும், திரு ஆங்கின் குடும்பத்தாரிடம் தகவல் வழங்கியது இன்னும் மேம்பட்டு இருந்திருக்கலாம் எனச் சொன்ன திரு நகோடா, முக்கியத் தருணங்களில் நோயாளிகளின் குடும்பத்தாருடன் உடனுக்குடன் தகவலைப் பரிமாறும்படி மருத்துவமனைகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
மரண விசாரணை அதிகாரியின் தீர்ப்பைக் கேட்க வந்திருந்த திரு ஆங்கின் குடும்பத்தாருக்கு திரு நகோடா தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

