உட்லண்ட்சில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நிகழ்ந்த சாலை விபத்தில், காரில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காக 33 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உட்லண்ட்ஸ் அவென்யூ 10, உட்லண்ட்ஸ் அவென்யூ 7 சந்திப்பில் அதிகாலை 1.55 மணியளவில் இந்த விபத்து குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்து நிகழ்ந்த இடத்தில் 29 வயது ஆண் பயணி ஒருவர் இறந்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் லேசான காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட மறுத்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
Singapore roads accident.com ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்கள், வெறிச்சோடி கிடந்த சாலையின் நடுவே வெள்ளை நிற கார் ஒன்று மோசமாக சேதமுற்று இருந்ததைக் காட்டின.
பின்னணியில் நீல நிறக் காவல்துறைக் கூடாரம், அவசர மருத்துவ வாகனம், காவல்துறை மோட்டார்சைக்கிள் ஆகியவை தெரிந்தன.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

