கிராஞ்சி சாலையை நோக்கிச்செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 27 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஒரு காரும் ஒரு வேனும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காவல்துறைக்கும் மாலை 4.30 மணியளவில் தகவல் கிடைத்தது. அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநர் சுயநினைவை இழந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார். 61 வயது பெண் வேன் ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்தில், காரின் முன்பகுதி நசுங்கியது. அதன் முன்கண்ணாடி சிதறியது. வேனின் வலது புறம் சேதமுற்றது.
விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.