ஆடவர் ஒருவர் இணையத்தில் கவண், களிமண், எஃகுக் கருவிகள் ஆகியவற்றை வாங்கி, ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஓர் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் அவற்றைப் பயன்படுத்தினார்.
சில புறாக்களை நோக்கி கவணை எறிந்தபோது, அதிலிருந்த பொருள் எதிரில் இரண்டாம் மாடியில் உள்ள வீடு ஒன்றின் சமையலறை சன்னலில் பட்டு ஓட்டையை ஏற்படுத்தியது.
யூ சுவேயாவ் என்ற அந்த 37 வயது சிங்கப்பூரருக்கு மார்ச் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் $1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தனிநபர் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆயுதம் வைத்திருந்தது, பறவைகளைக் கொடுமையான முறையில் அச்சுறுத்தியது ஆகியவற்றுக்கான இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
யூ, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இணையத்தில் உள்ள சீன இணையச் சந்தையிடங்களில் அந்தப் பொருள்களை வாங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டு உரிமையாளர் வீடு திரும்பியதும் சேதமடைந்த சன்னலைக் கண்டார். அவர் காவல்துறையில் புகார் செய்து $1,030 செலவில் புதிய சன்னலைப் பொருத்தினார். யூ, முழு தொகையையும் வீட்டு உரிமையாளரிடம் செலுத்திவிட்டார்.
யூவிடமிருந்து இரண்டு கவண்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

