சிங்கப்பூரில் 13 வயது சிறுமியர் இருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 20 வயது ஆடவருக்கு ஒன்பது ஆண்டுகள், ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு 12 பிரம்படிகளும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறுமிகளின் தனிப்பட்ட விவரங்களைக் கருத்தில்கொண்டு குற்றவாளியின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.
குற்றச் செயல்கள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையே நடந்தன.
சிறுமியர் இருவரிடமும் தனக்குக் குறைவான வயது எனக்கூறி அந்த ஆடவர் சமூக ஊடகம் வழியாகவும் சமூக நிகழ்ச்சி வழியாகவும் பழகினார்.
ஆடவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, குற்றவாளி பணத்திற்காகத் தனது வங்கிக் கணக்கு விவரங்களை மோசடியாளர்களுக்கும் வழங்கி உதவியுள்ளார். அந்தக் குற்றங்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.

