காவல்துறை கென்டன்மென்ட் வளாகத்தின் பிரதான நுழைவாயில் கண்ணாடிக் கதவை உடைத்ததாகக் கூறப்படும் ஆடவர்மீது நாசவேலையில் ஈடுபட்டதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 17) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சரவணன் அருளானந்தன் பிள்ளை என்ற அந்த 44 வயது ஆடவர், செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் மதுபோதையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கிட்டத்தட்ட 500 கிராம் எடையுள்ள கல்லை ஆடவர் ஒருவர் இருமுறை வீசி எறிந்ததால் கண்ணாடிக் கதவு சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவரை மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டது. அவரது வழக்கு அக்டோபர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.
