ஜாலான் புசாரில் நண்பரைச் சந்தித்த பிறகு, ஆடவர் ஒருவர் தாய் செங்கில் மதுபானக் கூடத்தைத் திறப்பதற்கான யோசனைக்கு ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அந்த மதுபானக் கூடத் தொழில் பின்னர் கள்ளத்தனமாகப் பணம் சம்பாதிக்கும் திட்டமாக மாறியது.
வெளிநாட்டுப் பெண்களுக்கு வேலை அனுமதிச் சீட்டுகளைப் பெற்று, அவர்களைப் பணியில் அமர்த்தி, பின்னர் மற்ற வேலைகளைச் செய்ய அவர்களை அனுமதித்து, அவர்களிடம் மாதாந்தரக் கட்டணம் வசூலிப்பதே திட்டம்.
சிங்கப்பூரரான தாம் யியோங் டொங், 62, தமது முன்னாள் மனைவியையும் வேறொரு திட்டத்தில் சேர்த்துக்கொண்டார்.
தாம், ‘ஃபன்ஸ்டார்டர்’ எனும் காராவோக்கே தொழிலுக்கு அவரை இயக்குநராக நடிக்கவைத்தார்.
மனிதவளச் சட்டத்தை மீறியதற்காகவும் வேலை அனுமதித் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் தாம்முக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் $24,050 அபராதமும் செலுத்தவேண்டும். ஆனால் தம்மால் அபராதத்தைச் செலுத்த முடியாது என்று தாம் கூறினார். அதனால் அவர் மேலும் ஏழு வாரங்கள் சிறையில் இருப்பார்.
வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துதல் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை தாம் ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

