‘சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனி’யில் பணிபுரிந்த மூத்த செயல்பாட்டுத் தொழில்நுட்பர் ஒருவர், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நச்சு வாயு காற்றில் கலந்தபோது, மற்றொரு நிறுவனத்தின் ஊழியர்களிடம் எண்ணெய் ஆலை ஒன்றில் பணிபுரியும்படி கூறினார்.
அப்போது ‘பிஇசி’ என்ற நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த திரு பழனிவேல் பாண்டிதுரையும் திரு பெரியசாமி கொலங்கிநாதனும் ‘ஹைட்ரோஜன் சல்ஃபைட்’ வாயுவால் மயங்கி விழுந்தனர்.
அந்த இருவரையும் மீட்க முயன்றபோது சக ஊழியரான திரு நாராயணன் முரசொலியும் மயங்கி விழுந்தார்.
மூவரும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 30 வயது பழனிவேல் ஐந்து நாள்களுக்குப் பிறகு ரசாயனக் காயங்களால் பல உறுப்புகள் செயலிழந்து உயிர் இழந்தார்.
திரு பெரியசாமிக்கும் திரு நாராயணனுக்கும் மோசமான காயங்கள் ஏற்பட்டபோதும், அவர்கள் உயிர்பிழைத்தனர்.
சம்பவம் நடந்தபோது மூத்த செயல்பாட்டுத் தொழில்நுட்பராக இருந்த 47 வயது லெக் சிங் ஹுவாவிற்கு ஏப்ரல் 12ஆம் தேதி நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜூரோங் தீவின் மெர்லிமாவ் ரோட்டில் உள்ள எண்ணெய் ஆலையில் தாம் கவனக்குறைவாக நடந்துகொண்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் ‘பிஇசி’ நிறுவனத்தைச் சேர்ந்த சில ஊழியர்களிடம், குழாய்களில் பணிகள் தொடங்கப்படலாம் என்று லெக் கூறினார்.
மாலை ஆறு மணிவாக்கில் திரு பழனிவேலும் திரு பெரியசாமியும் அங்குப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, நச்சு வாயு காற்றில் திடீரென வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.