தீவு விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
துவாசை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில், தோ குவான் சாலைக்கு இட்டுச்செல்லும் வெளிச்சாலைக்குப் பிறகு ஒரு வேனும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காலை 7.36 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
தலைக்குப்புறக் கவிழ்ந்த வேனில் சிக்கிக்கொண்ட அதன் ஓட்டுநரும் பயணியும் மீட்புக் கருவிகளைக் கொண்டு மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
21 வயது ஆண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர் ஒருவர் அறிவித்தார். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது 18 வயது ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்தார்.
‘சிங்கப்பூர் ரோடு ஆக்சிடண்ட்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தில், விரைவுச்சாலையின் வலதுபுறம் உள்ள இரு தடங்களில் ஆரஞ்சு நிற வேன் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து கிடப்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் காவல்துறை கார் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.